Skip to Main Navigation
செய்தி வெளியீடு செப்டம்பர் 17, 2020

இலங்கை மனித மூலதன ஆதாயங்களில் முன்னேறியுள்ள போதும் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் கற்றல் விளைவுகளுடன் அதை விரைவுபடுத்த முடியும்

கொழும்பு, செப்டெம்பர் 17, 2020 –  இன்று வெளியிடப்பட்டுள்ள உலக வங்கி குழுமத்தின் 2020 மனித மூலதனக் குறியீடு, இலங்கையில் இன்று பிறந்த ஒரு குழந்தை பூரணப்படுத்தப்பட்ட கல்வியையும் முழுமையான ஆரோக்கியத்தையும் அனுபவித்திருந்தால் ஒப்பீட்டளவில் அக்குழந்தை வளரும்போது, 60 சதவிகிதம் ஆக்கத்திறனைக் கொண்டிருக்கும் என கண்டறிந்துள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தினதும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளினதும் சராசரியை விட அதிகமானதாகும்.

மனித மூலதனத்தில் முதலிடுவதானது - மக்கள் தங்கள் வாழ்க்கையில் திரட்டும் அறிவு, திறன்கள் மற்றும் ஆரோக்கியம் - குழந்தையின் திறமைக்கான வாயிலைத் திறப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முக்கியமானதாகும்.

" கோவிட்-19 தொற்றுப்பரவலை அடுத்து, மக்களில் முதலீடு செய்வது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது. ஏனெனில் இது மீட்பு மற்றும் மீள் வளர்ச்சிக்கு தேவையான வலுவான அடித்தளங்களை அமைக்கும்" என்று உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான் பணிப்பாளர் ஃபாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ் தெரிவித்தார். "நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உயர் தரமான கற்றலின் தேவை ஆகியவற்றின் காரணமாக வளர்ச்சி குன்றுதல் என்பது மனித மூலதன குறியீட்டின் இரண்டு பகுதிகள் ஆகும். குறிப்பாக உயர் நடுத்தர வருமான நிலையின் தொடக்கத்தில் உள்ள ஒரு நாடு என்ற வகையில் இதில் இலங்கைக்கு முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது" என்றார்.

இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்ய, நாட்டின் வளர்ச்சியடையாத பிராந்தியங்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதுடன் காலப்போக்கில் மனித மூலதன வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய கற்றல் விளைவுகளை அளவிடவும் கொள்கை அபிவிருத்தியை அறிவிக்கவும் கற்றலை மேம்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய கவனக்குவிப்பு அவசியமாகும்.

உலகளாவிய ரீதியில், தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் - 1 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் - பாடசாலைக்குச் செல்லவில்லை. சராசரியாக, அவர்கள் அரை ஆண்டு பாடசாலைக் கல்வியை இழக்க நேரிடும். இது எதிர்காலத்தில் கணிசமான பண இழப்புகளுக்கும் வழிவகுக்கலாம். பல குழந்தைகள் முக்கியமான தடுப்பூசிகளை தவறவிட்டுள்ளதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு கணிசமான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் குறிப்பாக பெண்களுக்கும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கும் ஆழமாக உள்ளது. இதனால் பலர் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் வறுமைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

2020 மனித மூலதனக் குறியீட்டில் உலக சனத்தொகையில் 98 சதவீதத்தை உள்ளடக்கிய 174 நாடுகளின் 2020 மார்ச் வரையிலான சுகாதார மற்றும் கல்வித் தரவுகள் உள்ளடங்குகின்றன. இது குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வி நிலை குறித்த தொற்றுநோய்க்கு முந்தைய அடிப்படைகளை வழங்குகிறது.

சிறுமிகளுக்கான மனித மூலதன விளைவுகள் சிறுவர்களை விட சராசரியாக அதிகமாக இருப்பதாக மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இது தொழிலாளர் சந்தையில் மனித மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பிடத்தக்க வாய்ப்புகளாக மாற்றப்படவில்லை. சராசரியாக, தெற்காசியாவில் ஆண்களை விட வேலைவாய்ப்பு விகிதங்கள் பெண்களுக்கு 40 சதவீதம் புள்ளிகள் குறைவாக உள்ளன. மேலும், தொற்றுநோய் பரவல் பாலின அடிப்படையிலான வன்முறை, சிறுவர் திருமணம் மற்றும் சிறு வயது கர்ப்பம் ஆகியவற்றின் அபாயங்களை அதிகரிக்கக்கூடும். இவை அனைத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கற்றல் மற்றும் வலுவூட்டலுக்கான வாய்ப்புகளை மேலும் குறைக்கின்றன.

"இலங்கையும் உலக வங்கியும் மனித மூலதனத்தில் முதலீடு செய்ய பல தசாப்தங்களாக இணைந்து பணியாற்றியுள்ளன, இன்று இந்த கடினமான வெற்றிகள் ஆபத்தில் உள்ளன" என்று இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளர் சியோ காந்தா கூறினார். 

"வசதி குறைந்த பகுதிகளில் சுகாதார சேவைகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை விரிவுபடுத்துவதற்கும், குழந்தை பருவ வளர்ச்சி மற்றும் கற்றல் விளைவுகளை அதிகரிப்பதற்கும், உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும், மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களைத் தணிக்க சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொற்றுநோய்களின் போதும் அதற்குப் பின்னரும் மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களில் முதலீடு செய்வதற்கும் நீண்டகால தீர்வுகளை உருவாக்க உலக வங்கி குழுமம்உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. இலங்கையில், குழந்தை பருவக் கல்வி மற்றும் பராமரிப்புக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், பொதுக் கல்வியில் கற்றலை மேம்படுத்துவதற்கும், பொருளாதார மேம்பாட்டுக்கு உயர் கல்வியின் பொருத்தத்தை வலுப்படுத்துவதற்குமான முன்முயற்சிகளை வங்கி ஆதரிக்கிறது. பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் வீடுகளுக்கு ஆதரவளிக்க சமூக பாதுகாப்பு வலையமைப்புகளின் செயல்திறனை வலுப்படுத்தவும் வங்கி உதவுகிறது. இதற்கு மேலதிகமாக, வங்கியானது, கோவிட் 19 தொற்றுநோயின் சவால்களுக்கு பதிலளிப்பது உட்பட சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுகிறது.

வளர்ந்துவரும் நாடுகளுக்கான நிதி மற்றும் அறிவின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றான உலக வங்கி குழுமம், வளர்ந்துவரும் நாடுகளுக்கு அவர்களின் தொற்றுநோயை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த உதவும் வகையில் பரந்த, விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாம் பொது சுகாதார தலையீடுகளுக்கு ஆதரவளித்து வருகிறோம், முக்கியமான பொருட்கள் மற்றும் உபகரணங்களின் ஓட்டத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறோம், மேலும் தனியார் துறை தொடர்ந்து இயங்குவதற்கும் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுகிறோம். 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்கவும், மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்யவும், வணிகங்களை ஆதரிக்கவும், பொருளாதார மீட்சியை மேம்படுத்தவும் 15 மாதங்களுக்கு மேலாக 160 பில்லியன் டொலர் வரை நிதி உதவியை நாங்கள் பயன்படுத்துவோம். மானியங்கள் மற்றும் அதிக சலுகைக் கடன்கள் மூலம் 50 பில்லியன் டொலர் புதிய IDA வளங்களும் இதில் அடங்கும். ”


தொடர்பு

கொழும்பில்
திலினிகா பீரிஸ்
dpeiris@worldbank.org
வாஷிங்டனில்
டயானா ஷங்
dchung1@worldbank.org
Api
Api