கொழும்பு, ஜூலை 5, 2021 – ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள் இன்று கொழும்பை வந்தடைந்தன. அடுத்த சில வாரங்களில் கொண்டு வரப்படவுள்ள 800,000 தடுப்பூசிகளின் முதல் தொகுதியாக இது இருக்கின்றது. உலக வங்கியின் இலங்கை கொவிட்-19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் கீழ் நிதியுதவியளிக்கப்பட்ட மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் 2021 டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளன.
“இலங்கையர்களுக்கு பாதுகாப்பான, வினைத்திறன் மிக்க தடுப்பூசிகளுக்கான நியாயமான அணுகும் வசதியை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பங்காளர்களுடன் இணைச் செயற்பாட்டினை முதல்தொகுதி தடுப்பூசிகளின் விநியோகம் குறிக்கின்றது” என மாலைதீவுகள், நேபாளம், மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் நாட்டுப் பணிப்பாளர் பாரிஸ் எச். ஹடாட் ஷெர்வோஸ் தெரிவித்தார். “மேலும் பல தடுப்பூசிகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வருட இறுதியில் இலங்கையை வந்தடையும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2020ன் ஆரம்பத்தில் முதலாவது கொவிட்-19 சம்பவம் பதிவு செய்யப்பட்டது முதல், இலங்கையானது பெருந்தொற்றினை வெற்றிகரமாக கையாண்டது. தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கின்றது. அவசர சுகாதார தேவைகள் தொடர்பில் முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்ட உலக வங்கியின் உதவியானது, எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான இலங்கையின் பொது சுகாதார கட்டமைப்புக்கு உதவும்.
இதுவரை, வங்கியின் ஆதரவு மூலக்கூறு உயிரியல் ஆய்வகங்களை நிறுவுதல் மற்றும் அத்தியாவசிய ஆய்வக மற்றும் உயிர் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்ற இலங்கையின் சோதனை திறனை வலுப்படுத்த உதவியது. நோயாளிகளுக்கு ஒட்சிசன் விநியோகம் கிடைப்பதை உறுதிசெய்து, மாவட்ட அளவிலான ஒட்சிசன் உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் நோயாளியின் சிகிச்சை திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் புதிய தனிமைப்படுத்தும் அலகுகள் மற்றும் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு / உயர் சார்பு பிரிவு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 கொவிட்-19 சிகிச்சை மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க உலக வங்கி நிதிகள் உதவியுள்ளன.
"பல ஆண்டுகால முதலீட்டின் மூலம் இலங்கையின் ஈர்க்கக்கூடிய சில மனித மூலதன ஆதாயங்களை இந்த தொற்றுநோய் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது" என தெற்காசிய பிராந்திய மனித அபிவிருத்தி பிராந்திய பணிப்பாளர் லின் டி. ஷெர்பர்ன்-பென்ஸ் கூறினார். " சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றிற்கான இழப்புகளை மீண்டும் பெறுவதற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்கும் இலங்கை முயற்சிக்கும்போது அதை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறௌம்" என அவர் மேலும் கூறினார்.
2021 மே மாதம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் உலக வங்கி தடுப்பூசி ஒப்புதலுக்கான இரண்டு அளவுகோல்கள் மூலமாக இந்த தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன. கொவெக்ஸ் வசதியின் கீழ் கொள்முதல் செய்யப்படும் மற்றும்/அல்லது விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் WHO முன்தகுதி அல்லது WHO அவசர பயன்பாட்டு பட்டியலில் உள்ள தடுப்பூசிகள் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அடையாளங் காணப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளில் ஓருவரிடமிருந்து வழக்கமான அல்லது அவசர கால அனுமதிப் பத்திரம் அல்லது அதிகாரம் பெற்ற தடுப்பூசிகளுக்கு உலக வங்கி நிதி பயன்படுத்தப்படலாம்.
இலங்கையின் பெருந்தொற்று முகாமைத்தும் மற்றும் தடுப்பு முயற்சிகளுக்கான, இலங்கை கொவிட் அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயற்றிட்டமானது மொத்தமாக 298.07 மில்லியன் டொலர்களில், மேலதிக 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தடுப்பூசி ஆதரவுக்கானதாக உள்ளது. எதிர்பார்க்கப்படும் திட்ட முடிவுகளில் குறுகிய கால அவசர தேவைகளை பூர்த்தி செய்வது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான பணப்பரிமாற்றம், அத்துடன் தொற்றுநோய் தயாரிப்புக்கான சுகாதார அமைப்புகளை நீண்டகாலமாக வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.