- lp-body-content
- first-letter
இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தனக்கு வேலை கிடைத்ததைக் கேள்வியுற்ற இராகவர்ஷினிக்கு உற்சாகம் பொங்கியது. அவள் பதற்றமாகவும் இருந்தார். நகரத்தின் விறுவிறுப்பான சூழலுக்கு மத்தியில் தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிப்பது அவளுக்கு சுலபமாக இருக்கப் போவதில்லை.
அவளுடைய பெற்றோரும் கவலைப்பட்டனர். அவர்களின் மகள் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே தங்க இருக்கிறாள். எனவே அவள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்ய விரும்பினர்.
"சிறிய நகரத்திலிருந்து சென்னை போன்ற பெரிய நகரத்துக்கு வருவது முதலில் மிகவும் பயமாக இருந்தது. எங்கு தங்குவது, யாரை சந்திப்பது என்று எனக்குத் தெரியவில்லை." என்று இராகவர்ஷினி நினைவு கூர்ந்தாள்.
அதிர்ஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, மாநில அரசு 10 முக்கிய நகரங்களில் தோழி தங்கும் விடுதிகள் என்கிற பணிபுரியும் பெண்களுக்கு புதிய தங்கும் விடுதிகள் அமைந்திருந்தன. (தோழி என்றால் தமிழ் மொழியில் ‘பெண் நண்பர்’ என்று பொருள்.)
- lp-body-content
- first-letter
- lp-body-content
இராகவர்ஷினி தேடி, அவளுக்கு சரணாலயமாக மாறிய இந்த மகளிர் தங்கும் விடுதி ஜூலை 2023ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நகரத்தின் ஓர் ஆற்றல்மிக்க பணி மையமாக விளங்கும், தாம்பரத்தில் அமைந்துள்ள இந்த விடுதி, நவீனமானது, சுத்தமானது. அவருக்குத் தேவையான உணவு, சலவை மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பு என அனைத்து சேவைகளையும் குறைவான கட்டணத்தில் வழங்கியது.
அவளது தாயாரான சீதா, தனது மகளை புதிய அறையில் குடியமர்த்தியதில் மகிழ்ச்சியடைந்தார். "என் முதல் கவலை பாதுகாப்பு," என்ற அவர், "ஆனால் என் மகள் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் மற்றும் 24/7 பாதுகாப்பு உள்ள ஒரு இடத்தில் இருப்பதை பார்த்து எனக்கு மன அமைதி ஏற்பட்டுள்ளது." என்று தெரிவிக்கிறார்.
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு பாரம்பரியத்தை மீண்டும் உருவாக்குதல்
இந்தியாவிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. அதன் உழைக்கும் வயது பெண்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெண்கள் தொழிலாளர் சக்தியாக உள்ளனர். இது தேசிய சராசரியை விட 15 சதவீதம் அதிகம்.
இதுபோன்று அதிக எண்ணிக்கையில் நகரங்களுக்குச் செல்லும் பெண் ஆசிரியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தங்கள் தேர்வுகளுக்காக தயார் செய்வதற்காக குறுகிய காலம் தங்கி, வேலை தேடும் மாணவிகள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை அமைப்பது இது முதல் முறை அல்ல.
ஆனால், முன்பு கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் நன்றாகப் பராமரிக்கப்படவில்லை. பெரும்பாலும் அடிப்படை சுகாதாரத் தரங்களை பராமரிக்கவும் அவை தவறிவிட்டன. மேலும், அத்தியாவசிய சேவைகளும் குறைவாகவே இருந்தன. எனவே, அவற்றின் கட்டணம் குறைவாக இருந்தபோதிலும், அவை அவ்வளவாக பயன்படுத்தப்படவில்லை.
எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரி
இந்த முறை, முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை இந்த மாநிலம் பின்பற்றியது. உலக வங்கியின் ஆதரவுடன், அரசு அதன் செயல்பாட்டு முறையை மாற்றியது.
ஒரு புதுமையான பொது-தனியார் கூட்டாண்மை (PPP) அணுகுமுறை உருவாக்கப்பட்டது. தங்குவிடுதிகளை கட்டுவதற்கு பகுதி அளவு மானியத்துடன் மாநிலம் நிலத்தை வழங்கியது, அதே நேரத்தில் தமிழ்நாடு தங்குமிட நிதியமும் கட்டுமானத்திற்கு நிதி ஆதரவு அளித்தது. ஆனால், அதை விட முக்கியமாக, ரியல் எஸ்டேட் சந்தையில் தங்குமிட நிதியத்தின் தொழில்முறை நிபுணத்துவம், இந்த தங்குவிடுதிகளின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் சேவைகளின் தொழில்முறை நிர்வாகத்திற்கு தனியார் ஏலம் எடுக்கும் திறந்த ஏல செயல்முறையை நடத்துவது உட்பட எல்லா நல்ல நடைமுறைகளையும் நிறுவ உதவியது.
இந்த 10 தோழி தங்கும் விடுதிகளும், புதியவை மற்றும் மறுசீரமைக்கப்பட்டவை. மாநிலம் முழுவதும் சுமார் 2,000 பணிபுரியும் பெண்களுக்கு ஒரு தங்கும் இடத்தை இவை வழங்குகின்றன. பெண்கள் தங்களுடைய வரவு செலவை பொறுத்து, கட்டணம் குறைவான அல்லது குளிரூட்டப்பட்ட அறைகளையோ, ஒற்றை, இரட்டை அல்லது நான்கு பேர் பகிர்ந்து கொள்ளும் அறைகளையோ, குறுகிய அல்லது நீண்ட காலம் தங்குவதற்கு ஏற்ற அறைகளையோ தேர்வு செய்யலாம். இந்த தங்குவிடுதிகளில் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் உள்ளன.
அரசுக்கு சொந்தமான ஆனால் தனியார் நடத்தும் இந்த தங்கும் விடுதிகள் 90 சதவீதம் நிரம்பியே உள்ளன. இதனால், அவை தனியார் விடுதிகளுக்கு நல்ல போட்டியாக விளங்கி, தனியார் வழங்குகின்ற சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கின்றன என்பதில் ஆச்சரியமில்லை.
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஏராளமான மனித வளம் உள்ளது. அதன் பெண்களின் உயர்ந்த சிந்தனைனகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இத்தகைய பெண்கள், தங்களின் கனவுகளை மெய்ப்பிப்பதற்கும், ஒரு தொழில்முறை வாழ்க்கையை அமைத்துகொள்வதற்கும் நகரங்களுக்குச் செல்வதை இந்த தங்கும் விடுதிகள் ஒரு பாதுகாப்பான எளிமையான சூழலை அமைத்து கொடுக்கிறது.இந்த விடுதிகளை நடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் எந்தவித அரசு மானியமும் தேவைப்படாமல் மகளிர் நல்ல சேவைகளைப் பெறுவதை “பொது-தனியார் கூட்டாண்மை” (PPP) அணுகுமுறை உறுதி செய்துள்ளது.” என்று தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு தங்குமிட நிதியத்தின் இணை முதல்வர்களான மாலதி ஹெலன் மற்றும் சதன்பாபு ஆகியோர் மேலும் கூறுகையில், "இத்தகைய முன்மாதிரி, அதிகமான பெண்களை தொழிலாளர் சக்தியோடு இணைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது இப்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டு வருகிறது."
பெண்கள் உருவாக்கும் ஒரு புதிய வாழ்க்கை
இலங்கையிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த திலக்க்ஷனா, தங்குவதற்கு இந்த விடுதியை கண்டுபிடித்த பிறகு நிம்மதியடைந்தார். "நான் ஒருவரின் மனைவியாகவோ அல்லது தாயாகவோ மட்டுமே இருக்க விரும்பவில்லை," என்று அவள் வலியுறுத்தினார். மாறாக, இசையில் ஒரு தொழில்முறை வாழ்க்கையை அவள் விரும்புகிறார். “ஒரு நாள் மியூசிக் ஸ்டுடியோ மற்றும் குடியிருப்பு எனக்கு சொந்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதுவரை, எனது வருமானத்துக்கும் செலவு திறனுக்கும் ஏற்ப அமைந்துள்ள இந்த தங்கும் விடுதி எனக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும்." என்று அவர் கூறுகிறார்.
நீண்ட காலம் விடுதியில் தங்கியிருப்பவர்களும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் குறிப்பிடுகின்றனர். "எனது முந்தைய தங்கும் விடுதி அனுபவம் ஏமாற்றம் அளித்தது," என்று முன்பு வேறு ஒரு விடுதியில் தங்கியிருந்தவர் தெரிவித்தார். மேலும், “அங்கே இரவு உணவு அடிக்கடி கெட்டுப்போய் இருந்தது. ஆனால் இங்கே, ஒரு விற்பனையாளர் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை வழங்குகிறார், நாங்கள் சூரிய ஒளியுடைய, விசாலமான உணவறையில் சாப்பிடுகிறோம்." என்கிறார்.
இந்த விடுதிகளை நிர்வகித்து வரும் அனைத்துப் பெண்கள் குழுவும் ஒரு சமூகத்தை பேணிக்காத்து வளர்ப்பதில் பெருமிதம் கொள்கிறது. "வேலை செய்யும் மகளிர் தங்கும் விடுதியில் நானே தங்கியிருந்ததால், அதற்கு ஆதரவான சூழலின் முக்கியத்துவம் எனக்கு புரிகிறது" என்று மேலாளர்களில் ஒருவர் கூறினார்.
தொடர்புடையவை
தொடர்புடையவை
- lp-body-content