கொழும்பு, செப்டம்பர 10, 2021 – குழாய் நீர் வசதிகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், புறச்சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர்விநியோக மற்றும் புறச்சுகாதார மேம்படுத்தல் செயல்திட்டத்திற்கான (WaSSIP) 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் நிதியிடலில் இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் அண்மையில் கைச்சாத்திட்டன. இந்த கூடுதல் நிதியிடலானது, ஏழு மாவட்டங்களில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அடையும் வகையில் நீர் விநியோகம், புறச்சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளை வழங்க பரவலாக்கப்படும்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் சஜித் அட்டிகல அவர்கள் இணைய வழியாகவும், உலக வங்கி சார்பில் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹதாத்-ஷெர்வொஸ் அவர்களும் கைச்சாத்திட்டனர்.
“கொவிட்-19 பெருந்தொற்றானது பாதுகாப்பான நீர் மற்றும் புறச்சுகாதார வசதிகளுக்கான உடனடி தேவையை ஒவ்வொரு இல்லத்திலும் குறைமதிப்பிற்குட்படுத்தியுள்ளன” என மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹதாத்-ஷெர்வொஸ் தெரிவித்தார். “சமுதாயத்தினால் செயல்படுத்தப்படும் நீர் விநியோகத் திட்டங்கள் உறுதியான, நிலையான பெறுபேறுகளை தரும் என்பதனை வெளிக்காட்டியுள்ளது. இந்த கூடுதல் நிதியானது மேலும் பல இல்லங்களுக்கு நீர் மற்றும் புறச்சுகாதார வசதிகள் சென்றடைவதற்கு உதவும்” என அவர் மேலும் கூறினார்.
புதிய நகர, கிராம மற்றும் பெருந்தோட்ட நீர் விநியோகத் திட்டங்களை அமைப்பதன் மூலமும், பாதுகாப்பான நீர் விநியோகத்தை வீடுகளுக்கு வழங்குவதற்கு தற்போதுள்ள விநியோகத் திட்டங்களை புனரமைப்பதன் மூலமும் குழாய் நீருக்கான அணுகலை அதிகரிப்பதற்கு இந்த திட்டம் இலக்கு வைத்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, பதுளை, நுவரெலியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாட்டங்களில் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த கூடுதல் நிதியின் கீழ், காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இரண்டு மேலதிக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
“திட்டம் குறித்தும், மக்கள் மத்தியில் அதன் தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்” என நீர் வழங்கல்கள் அமைச்சர் கௌரவ. வாசுதேவ நாணயக்கார அவர்கள் தெரிவித்தார். “அடுத்த நான்கு வருடங்களில் 4.7 மில்லியன் மக்களை உள்ளடக்கும் வகையில் அனைவருக்கும் நீர்” என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியை நோக்கிச் செல்வதற்கு இந்த கூடுதல் நிதி உதவும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டம் கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சமுதாயம்-சார் நிறுவனங்களை (CBO) தொடர்ந்து வலுப்படுத்தும் மற்றும் CBOக்களின் வலுவான கூட்டமைப்பை நிறுவி நீர் விநியோக சேவைகளை இயக்கவும் பராமரிக்கவும் நோக்கமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் CBOக்களில் முடிவெடுக்கும் திறன் போன்ற திறன் மேம்பாடு மற்றும் தலைமைப் பாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பெண்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் பெண் தலைவர்களின் வழிகாட்டல் மூலம் பெண்களின் குரலை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டம் நீர் வழங்கல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும். உலக வங்கியின் இந்த நிதியுதவி, தற்போதுள்ள 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான WASSIP திட்டத்தில் கூடுதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேர்க்கின்றது.
போக்குவரத்து, நகர்ப்புறம், நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள உலக வங்கியின் நிதியுதவித் திட்டங்களில் 18 திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.